Friday, 25 July 2014

தென்னை... பப்பாளி... வாழை...

தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொள்ளுங்கள்.

''தென்னைக்குத் தென்னை அதிகபட்சம் 27 அடி இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில், இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பயறு, தானியங்கள், காய்கள் மாதிரியான குட்டையான பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் வாழை, பப்பாளி போன்றவற்றை நடவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைப்பு!
தென்னைக்கு இடையில் பல தானியங்களை விதைத்து பூ எடுத்ததும் மடக்கி உழ வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு போன்ற தானியங்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; காராமணி, துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுகளில் ஏதாவதொன்றில் 4 கிலோ; நிலக்கடலை, சோயா, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; சோம்பு, தனியா, மிளகு, சீரகம் போன்ற வாசனைப் பொருட்களில் ஏதாவதொன்றில் 1 கிலோ; சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ... எனக் கலந்து விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழுவதுதான் பல தானிய விதைப்பு (எண்ணெய்வித்துப் பயிர்களில் கடுகு, எள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மட்டுமே போதுமானது).
இருமடிப்பாத்தி!
பல தானியச் செடிகளை மடக்கி உழுது, பதினைந்து நாட்கள் கழித்து, இரண்டடி இடைவெளியில், நான்கு அடி அகலத்துக்கு நீளவாக்கில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளில் ஒரு பக்கத்தில் 8 அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, வாழை நடவு செய்ய வேண்டும். பாத்தியின் மறுபக்கத்தில், முக்கோண நடவு முறையில், இரண்டு வாழைகளுக்கு இடையில் ஒரு பப்பாளி வருவது போல நடவு செய்ய வேண்டும். அதாவது, 8 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, பப்பாளிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நடவுக்கு முன்பு ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு டன் எரு, தலா 20 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 50 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் குவித்து... தென்னை மட்டைகளால் மூடி ஒரு மாதம் கழித்து தண்ணீர் தெளித்து புரட்டி விட வேண்டும். மீண்டும் ஒரு மாதத்துக்கு அப்படியே வைத்துவிட்டால், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்.
மாதம் 100 லிட்டர்!
மாதம் ஒரு முறை, பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். இலை, தழை மற்றும் தோப்பில் கிடைக்கும் கழிவுகளை பாத்திகளின் மீது மூடாக்காகப் போடலாம். நடவு செய்த 6-ம் மாதத்தில் மரத்துக்கு 10 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியும் வந்தால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
நடவு செய்த 4-ம் மாதத்தில் பப்பாளியில் பூவெடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற கணக்கில் விட்டுவிட்டு, மீதி ஆண் மரங்களைக் கழித்து விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பப்பாளியில் மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மொத்த மரங்களையும் அகற்றி, புதிதாக கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை... 9-ம் மாதம் குலைதள்ளி, 12-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.''

No comments:

Post a Comment