Tuesday, 24 February 2015

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....இளநீர்

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...
இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்!
''பசுமை விகடன்ல படிச்சுட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா போய் கன்னு வாங்கிட்டு வந்து நட்டோமுங்க... இப்போ மாசா மாசம் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்குதுங்க' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி.
நுரை ததும்பும் தண்ணீர்... சலசலத்து ஓடும் அமராவதி ஆறு... அதன் கரையில் வளைந்து பிரிந்து போகும் வண்டிப்பாதை. அதில் சில நிமிடங்கள் பயணித்தால் வந்து சேர்கிறது, சுப்பிரமணியத்தின் பண்ணை. எட்டிப் பறிக்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஏழு ஏக்கர் தென்னை. அதில் ஆரஞ்சு வண்ணத்தில் அழகு காட்டித் தொங்கும் இளநீர்க்குலைகள் என்று குளுமை சாமரம் வீசும் தோப்புக்குள் இளநீர் பறிப்பில் இருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.
''ஜீரோ பட்ஜெட் இளநீருங்க... குடிச்சுப் பாருங்க சும்மா ஜில்லுனு தித்திப்பா இருக்கும்'' என்று சொல்லியபடி இளநீரைச் சீவி நம் கையில் கொடுத்தபடியே பேசத்தொடங்கினார்.
நிரந்தர சாகுபடிக்கு மாற்றிய சூழல்!
''இந்த இடத்துல எனக்கு கிணத்துப் பாசனத்துல 15 ஏக்கர் நிலம் இருக்கு. வெங்காயம், மஞ்சள், குச்சிக்கிழங்கு (மரவள்ளி), கடலைனு எதைப் போட்டாலும் அமோக விளைச்சல் கொடுக்கிற செம்மண் பூமி. பக்கத்துல ஆறு ஓடுது. பருவமழை சரியா பெய்ஞ்சு ஆத்துல தண்ணி வர்றப்போ ஊத்துக்கசிவில பாசனக் கிணறு நொம்பிடும். அந்த சமயத்துல 15 ஏக்கருக்கும் பஞ்சமில்லாம, பாசனம் கிடைக்கும். ஆறு வறண்டுச்சுனா... போர்வெல் காப்பாத்திடும்.
ஆள் பத்தாக்குறை, கட்டுபடியாகாத விலைனு மாத்தி மாத்தி பிரச்னை வந்ததால, நிரந்தர பயிர் சாகுபடிக்கு மாற முடிவெடுத்து... ஏழு ஏக்கர்ல அல்போன்ஸா, செந்தூரா, நீலம், பெங்களூரானு மா ரகங்களை நடவு செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். ஒரு ஏக்கர்ல களத்துமேடு, தொழுவம் இருக்கு. மீதி ஏழு ஏக்கர்ல மட்டும் வருஷ வெள்ளாமை வெச்சோம். ஆனா, வருஷ வெள்ளாமை தோதா அமையல. அதனால, இந்த ஏழு ஏக்கர்லயும் வேற ஏதாவது நிரந்தர பயிரைப் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன்ல, மாண்டியா இளநீர் பத்தி 'கலர் கலரா இளநீ... கட்டுக்கட்டா பணம்’ங்கிற தலைப்புல செய்தி வந்துச்சு. அதுல, தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவப்பிரகாசம்கிறவரைப் பத்தி எழுதியிருந்தாங்க. சிவப்பிரகாசத்துக்கிட்ட பேசின பிறகு, நாளுக்கு நாள் இளநீருக்கான தேவை அதிகரிச்சுக்கிட்டே வர்ற சூழல்ல, நாமளும் அதை சாகுபடி செய்யுறதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்து கொஞ்சம் வேலைகள் இருந்ததால உடனடியா செய்ய முடியலை. நடவுக்கு கொஞ்ச வருஷம் தள்ளிப் போயிடுச்சு' என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார்.
ஒரு கன்னு 50 ரூபாய்!
'சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப் (Chowghat Orange Dwar) என்ற ரகத்தைத்தான் சிவப்பிரகாசம் நட்டிருந்தார். சி.ஓ.டினு சொல்லப்படுற அந்த ரக கன்னு, மாண்டியாவில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்துல கிடைக்கும்கிற தகவலையும் அவரே சொன்னார். நானும் அங்க முறைப்படி பதிவு செஞ்சு 600 கன்னுகள வாங்கிட்டு வந்து நிழலான பகுதியில பதியம் போட்டு நடவு செஞ்சேன். லாரி வாடகை எல்லாம் சேர்த்து ஒரு கன்னுக்கு 50 ரூபாய் அடக்கமாச்சு. வழக்கமா தென்னங்கன்னுகளை 25 அடி இடைவெளியிலதான் நடவு செய்வாங்க. இது குட்டை ரக தென்னைங்கிறதால, மட்டையோட நீளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால 22 அடி இடைவெளியில நடவு செஞ்சேன்.
ஒரு இளநீர் 14 ரூபாய்!
நடவு செஞ்சு நாலு வருஷம் ஆச்சு. போன வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வெட்ட ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் போனாத்தான் முழுமகசூல் கிடைக்கும். இப்போதைக்கு மாசாமாசம் கிடைக்கிறதை மொத்த வியாபாரிக்கே விலை பேசிக் கொடுத்துடறேன். வெட்டுக்கூலி, வேன் வாடகை எல்லாம் அவங்க செலவு. நமக்கு ஒரு இளநீருக்கு 14 ரூபாய் கிடைக்குது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மாசம் 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வருஷத்துல மொத்தம் எனக்கு 90 ஆயிரம் ரூபாய்தான் செலவாகியிருக்கு. காய் வெட்ட ஆரம்பிச்ச ஒரு மாசத்துலயே செலவு செஞ்ச பணம் கிடைச்சுடுச்சு'' என்று பெருமிதப்பட்ட சுப்பிரமணியம்,
''முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைக் குடும்பத்தோடு ஆர்வமா படிச்சுக்கிட்டு வர்றோம். அது மூலம் நாங்க கத்துகிட்ட விவசாய வழிமுறைகள் ஏராளம். ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு வந்த எங்களை ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்தி, நாட்டு மாடு வாங்க வெச்சதோட, 7 வருஷமா தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யுறதுக்கு தூண்டுகோலா இருக்கிற பசுமை விகடன், இப்ப மாசா மாசம் வருமானம் பாக்கறதுக்கும் காரணமா இருக்கு'' என்று நெகிழ்ந்து விடைகொடுத்தார்.
ஏக்கருக்கு 83 கன்றுகள்!
தென்னை சாகுபடி செய்யும் விதம் பற்றி சுப்பிரமணியம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
'தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 5ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தென்னை விவசாயம் 100 சதவிகிதம் பொருந்தும். இல்லையேல் பெயர் அளவுக்கே மகசூல் கிடைக்கும்.
ஊட்டத்துக்கு அமிர்தம்...வண்டுகளுக்கு அஸ்திரம்!
தென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் உட்பட இடுபொருட்களையும் சரியான நேரங்களில் கொடுத்தால் மட்டும்தான் மரம் நமக்கு விளைச்சல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர் வழியே கொடுத்து வர வேண்டும். பருவமழைக் காலங்களில் (ஆண்டுக்கு இரு முறை) ஒவ்வொரு மரத்துக்கும் 15 கிலோ கோழி எரு இட வேண்டும். வளரும் பருவத்தில் உள்ள தென்னங்குருத்துகளை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு போன்றவை தாக்கும். சில நேரங்களில் மரங்களின் தண்டுப்பகுதியில் ஓட்டை போட்டு சேதப்படுத்தி அடியோடு சாய்த்து விடும். தென்னை விவசாயத்தின் பெரிய சவாலே இதுதான்.
இந்தச் சிக்கலை அக்னி அஸ்திரம் மூலமாக சமாளிக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து அதில் 50 மில்லி எடுத்து வண்டு இருப்பதாக உணரும் குருத்துக்குள் ஊற்றினால் உள்ளே இருக்கும் வண்டு வெளியேறி விடும். அல்லது சலித்த மணலில் சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்துப் பிசைந்து குருத்துக்குள் தூவினால் வண்டுகள் மாண்டு விடும்.
மாதம் ஆயிரம் இளநீர்!
குட்டை ரகங்களின் மட்டைகளுக்கு குலைகளைத் தாங்க வலு இருக்காது. அதனால், குலைகள் ஒடிந்து விழுந்து விடும். இதைத்தடுக்க... பாரம் தாங்காமல் கீழ் நோக்கி தொங்கும் குலைகளில் கயிறால் இழுத்து வலுவான மேல்மட்டையில் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உயரம் மரம் வளர்ந்த பிறகு குலைகளைக் கட்டத் தேவை இருக்காது. இந்த சி.ஓ.டி.ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்கலாம். 5 ஆண்டுகளில் முழு மகசூலுக்கு வரும்போது இளநீர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.''
தொடர்புக்கு,
ஆர்.சுப்பிரமணியம்,  செல்போன்: 9942596971

 இயற்கை இளநீர் சுவை அதிகம்!
சுப்பிரமணியத்தின் தோப்பில் இளநீர் வெட்டிக்கொண்டிருந்த தாராபுரத்தைச் சேர்ந்த வியாபாரி பழனி, ''தாராபுரம், திருப்பூர்னு பல ஊர்களுக்குக் கொண்டுபோய் விற்பேன். வழக்கமா இந்தக் குட்டைரக ஆரஞ்சு கலர் இளநியில 500 மில்லி வரைதான் இளநீர் இருக்கும். குடிச்சா சப்புனுதான் இருக்கும். ஆனா, இவங்க தோட்டத்து இளநியில 700 மில்லிக்கும் மேல தண்ணி இருக்குது. ருசியும் நல்லா இருக்குனு குடிக்கிறவங்க சொல்றாங்க. தினமும் இந்த இளநீர் வேணும்னு கேட்கிறாங்க. அதனால வாரா வாரம் பறிக்கிற மாதிரி சுழற்சி முறையில ஏழு ஏக்கர்லயும் பறிக்குறேன். இயற்கை விவசாயம் செஞ்சா இளநீர் இப்படி ருசியா இருக்கும்னு பலரும் சொல்றாங்க. எல்லோரும் அதை செஞ்சா எங்களைப் போன்ற இளநீர் வியாபாரிங்க காட்டுல மழைதான்'' என்றார்
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

Wednesday, 11 February 2015

பால் கலக்காத இயற்கை பானம்

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!
ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.
பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.
துளசி இலை டீ:
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆவாரம்பூ டீ:
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
செம்பருத்திப்பூ டீ:
ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.
கொத்தமல்லி டீ:
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
புதினா இலை டீ:
புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கொய்யா இலை டீ:
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
முருங்கைக் கீரை டீ:
முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.
குறிப்பு:
டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

சிறு தானிய உணவுகள்

உணவு வயிறு நிறப்ப அல்லா
உயிர்....
தமிழர்களின் சிறு தானிய உணவுகள்:-
ஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பர்.
உண்பன என்பதற்கு அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள். சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல் ஆகியனவும் கொறிப்பன வரிசையில் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும். பச்சடி, கிச்சடி போன்றன நக்குவன வரிசையில் வரும். பருகுவன என்பதில் பானகம், பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும். சிற்றுண்டிப் பண்டங் களை (அப்பம், இட்லி ) தின்பன வரிசையில் அடக்கலாம்.
குறிப்பு :- இட்டளி என்ற பலகாரம் தமிழகத்தின் உணவாகவே வெளி உலகில் அறியப்படுவது, இடு முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில் பெயர் பின்னர் இகர விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்லி எனவும் படும்.
உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன.
சிறுதானிய உணவு வகைகளை பார்ப்போம் :
தினை அல்வா
தேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம்.
செய்முறை: தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
பலன்கள்: புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது. இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும். வைட்டமின்கள் நிறைந்த உணவு.
சிறுதானிய இடியாப்பம்
தேவையானவை: சாமை அரிசி - ஒரு குவளை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.
பலன்கள்: சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.
காய்கறிக் கூட்டுக் குருமா
தேவையானவை: கேரட், பீன்ஸ், நூக்கல், வெங்காயம், தக்காளி - தலா 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, சோம்பு, பட்டைப் பொடி - தலா சிறிதளவு, மிளகாய்த் தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 மேசைக்கரண்டி. அரைக்க: தேங்காய் - 1 (துருவியது), முந்திரி - 10 கிராம், சோம்பு - 5 கிராம். தாளிக்க: ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா இரண்டு, கிராம்பு - ஐந்து, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பலன்கள்: இவை கிழங்கு அல்லாத இயற்கை முறை பசும் காய்கறிகளாக இருக்க வேண்டும். அனைத்துக் காய்கறிகளும் சேரும்போது, கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் நிறைந்து இருக்கும். அவை நமது உள் உறுப்புக்குத் தேவையான நுண் சத்துக்களைக் கொடுக்கும். நார்ச் சத்தும் நிறைந்துள்ளது.
சாமை, காய்கறி பிரியாணி
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 50 கிராம், தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, புதினா - தேவையான அளவு, சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.கி, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை: நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும். சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.
பலன்கள்: அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன. அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்தும் கிடைத்து, உடல் வலுவைக் கூட்டுகிறது. காய்கறிகள், பட்டாணி சேர்ப்பதால், ஆரோக்கியம் கூடுகிறது.
வாழைத்தண்டுப் பச்சடி
தேவையானவை: தயிர் - ஒரு கோப்பை, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரைக் கோப்பை, நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரை நன்கு கலக்கி, மற்ற பொருட்களையும் சேர்த்து, பிரியாணியுடன் பரிமாறவும்.
பலன்கள்: வாழைத்தண்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
தேவையானவை: மாப்பிள்ளை சம்பா அரிசி - 500 கிராம், நாட்டுக் காய்கறிகள் - 400 கிராம், துவரம் பருப்பு - 150 கிராம், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 20 பல், சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி, புளி - ஒரு எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், கொத்துமல்லி- சிறிது.
செய்முறை: மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். துவரம் பருப்புடன், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சிறிது எண்ணெய், வெந்தயம், தக்காளி சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும். வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்.
பலன்கள்: மாப்பிள்ளைச் சம்பாவை, மணிசம்பா என்றும் கூறுவார்கள். நீரிழிவு நோய்க்கு நல்லது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து, அனைத்தும் சரிவிகிதத்தில் நிறைந்த உணவு இது.
கதம்பக்காய்க் கூட்டு
தேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு - சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 5, மஞ்சள் தூள் - சிறிது, இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: எல்லாக் காய்கறிகளும் கலந்து இருப்பதால், அனைத்துச் சத்துக்களும் நிறைந்தது இந்தக் கூட்டு. நுண் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. தாது உப்புகளும் அதிகம் நிறைந்திருப்பதால் உடலுக்கு எல்லா நன்மைகளூம் கிடைக்கும்.
குதிரைவாலி தயிர் சோறு
தேவையானவை: குதிரைவாலி அரிசி - 500 கிராம், பால் - ஒரு கோப்பை, தயிர் - அரை கோப்பை, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாதுளை, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை: குதிரைவாலியைச் சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சோறு குளிர்ந்த பிறகு, பால் மற்றும் தயிர் சேர்த்து, கையால் நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்:- அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது. அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது. இதனுடன் தயிர் சேரும்போது 'லாக்டோபாசிலஸ்’ (lactobacillus) என்ற வயிற்றுக்கு தேவையான பாதுகாப்பு பாக்டீரியாவை தருகின்றது. வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத் தன்மையைக் குறைத்து வயிற்றுப் புண்ணைச் சரிசெய்யும்
இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையானவை: இஞ்சி, நெல்லிக்காய் - தலா 100 கிராம், பூண்டு - 50 கிராம், வெல்லம் - சிறிது, மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி, வெந்தயம் (வறுத்துப் பொடித்தது), நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பலன்கள்:- இஞ்சியை 'அமிர்த மருந்து’ என்று சித்த மருத்துவத்தில் கூறுகின்றனர். பித்தத்தைத் தன்னிலைப்படுத்தி, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது.
சோள தோசை
தேவையானவை: சோளம் - 500 கிராம், உளுந்து - 100 கிராம், வெந்தயம் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
பலன்கள்:- ''பஞ்சம் தங்கிய உணவு'' என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது.
நிலக்கடலைத் துவையல்
தேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை - 250 கிராம், பூண்டு - 10 பல், புளி - சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் - தலா இரண்டு, உப்பு - சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும்.
பலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
சாமை மிளகுப் பொங்கல்
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், பாசிப்பருப்பு - 250 கிராம், இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி, நெய் - 3 மேசைக்கரண்டி, முந்திரி - 10 கிராம், சீரகம் - 2 தேக்கரண்டி, மிளகு - 3 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.
பலன்கள்:- எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சோளம் உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.
தினை கதம்ப இனிப்பு
தேவையானவை: தினை மாவு - 350கிராம், நெல் அரிசி மாவு - 50கிராம், வெல்லம் - 400கி, பால் - 300 மி.கி, ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி, நெய் - 150 மி.கி.
செய்முறை: நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு, நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறவும்.
தினை காரப் பணியாரம்
தேவையானவை: தினை அரிசி - 500 கிராம், உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 250 கிராம், மிளகாய் - 4, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு.
செய்முறை: தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
கடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
பலன்கள்: தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சாமைக் காரப் புட்டு
தேவையானவை: சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
பலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.
செய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
முக்கனிப் பழக்கலவை
தேவையானவை: மாம்பழம் - 3, வாழைப்பழம் - 5, பலாச்சுளை - 10, தேன் - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.
பலன்கள்:- நமது பாரம்பரிய உணவு விருந்தில் முக்கிய இனிப்பு உணவு இவை. பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. .இதயத்தைப் பாதுகாக்கும். மாம்பழமானது ஆண்மையைப் பெருக்கும். அதிகப்படியான உடல் பலத்தைத் தரும். அதில் சூடு அதிகம். அந்தச் சூட்டை, பலாப்பழம் குளிர்ச்சி செய்யும். இந்த மூன்றையும் கலவையாகச் சாப்பிடும்போது, உடல் சமநிலை அடையும்.
வரகு போண்டா
தேவையானவை: வரகு அரிசி மாவு - 300 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, சின்னவெங்காயம் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பனிவரகுப் புட்டு (கட்லட்)
தேவையானவை: உருளைக்கிழங்கு - 200 கிராம், பட்டாணி, காரட், பீன்ஸ், வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். காரட், பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். நீர்க்க இருந்தால், இதனுடன் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம்.
இதை நீள்வட்ட வடிவத்தில் உருண்டையாகப் பிடித்து கொள்ளவும். தீயை மிதமாகவைத்து, முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்: வரகில் புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு நல்ல வலு சேர்க்கும்.
தினைப் பாயசம்
தேவையானவை: தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
பலன்கள்: இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.
சோளப் பணியாரம்
தேவையானவை: சோளம் - ஒரு கோப்பை, உளுந்து - கால் கோப்பை, வெந்தயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, கல் உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.
மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.
பலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.
குறிப்பு: ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கைகுத்தல் அரிசி இட்லி
தேவையானவை: கைக்குத்தல் மாப்பிள்ளைச் சம்பா சிகப்பரிசி - ஒரு கிலோ, கறுப்பு உளுந்து - 200 கிராம், வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளாவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். உளுந்தைத் தோல் நீக்காமல், அப்படியே அரைக்க வேண்டும். மறுநாள், வழக்கம்போல இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
பலன்கள்: வைட்டமின் 'பி’, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் உண்டு. கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்துடன், வைட்டமின் 'பி 1 உண்டு. பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி.
குறிப்பு: மாப்பிள்ளைச் சம்பாவுக்குப் பதிலாக, தினை அரிசி சேர்த்துச் செய்தால் தினை இட்லி. ஆனால், எதுவானாலும் உளுந்தைத் தோலோடுதான் அரைக்க வேண்டும். இந்த இரண்டு இட்லிகளையுமே சூடாகச் சாப்பிட வேண்டும். ஆறினால் விரைத்துவிடும். மீண்டும் சுடவைத்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
தினை அதிரசம்
தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.
குதிரைவாலி வெண்பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.
பலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.
அசைவ உணவு
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம், வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு, தயிர் - அரைக் கோப்பை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.லி., கிராம்பு - 5, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை: கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.
பலன்கள்: நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.
சிறுதானியங்களின் சிறப்பு
தினை
10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினையும் ஒன்று. தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.
குதிரைவாலி
மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் - இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
கம்பு
அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.
சோளம்
அமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
வரகு
பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.
கேழ்வரகு
ஒரு காலத்தில் இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இன்று வசதியானவர்களும், வியாதியஸ்தர்கள் உண்ணும் உயிர் நாடி உணவாக மாறிவிட்டது. மிகவும் வெப்பமான பகுதியிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்குக் கூழாகவும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தோசை, இட்லி, இனிப்பு வகைகளாகவும் செய்து கொடுக்கலாம்.
நன்றி :-
சிறந்த சிறு தானியச் சிற்றுண்டிகளை வழங்கியிருக்கிறார், சித்த மருத்துவர் கு. சிவராமன். அதோடு, இதில் இடம்பெற்ற மற்ற உணவு வகைகளைப் படைத்தவர், திருமணங்களுக்கும், விழாக்களுக்கும் நமது பாரம்பரிய உணவைச் சமைத்துத் தரும் ராஜமுருகன். உணவக மேலாண்மை மற்றும் கலை அறிவியல் படித்துவிட்டு, சிறுதானிய உணவின் மீது உள்ள அக்கறையில், முழுமூச்சாக இறங்கிவிட்டார் இந்த இளைஞர். இந்த உணவுகளில் பயன்படுத்தியுள்ள சிறுதானியங்களின் பலன்களை, நமக்கு விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.
Reference for supermarket purchase:
Pearl millet : Kambu in Tamil
Finger millet: Kelveragu in Tamil
Foxtail millet: Thenai in Tamil
Kodo millet: Varagu in Tamil
Little millet: Samai in Tamil
Proso millet: Panivaragu in Tamil
Barnyard millet: Kuthiraivaali in Tamil
Sorghum: Cholam in Tamil

Tuesday, 10 February 2015

57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...

57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...
வியக்க வைக்கும் விழுப்புரம் ஜீரோ பட்ஜெட் பண்ணை!
மகசூல் காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்
ளைக்காமல் பணி ஆற்றிய விவசாயத் தொழிலாளர்கள் பலரும், வெவ்வேறு வேலைகளின் பக்கம் ஒதுங்கி வருவதால், விவசாயம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 100 நாள் வேலைத்திட்டம் வேறு, தொழிலாளர்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது, நிலத்தடி நீர். இவ்வளவையும் தாண்டி விவசாயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது 'மரம் வளர்ப்பு’தான்! அந்த நம்பிக்கையில், பழ மரங்கள், தடி மரங்கள் என வளர்த்து, கலக்கலாக வருமானம் பார்த்து வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரம்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் கஞ்சனூர் கிராமத்திலிருந்து வலதுபக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, தென்பேர் கிராமம். இங்கேதான் இருக்கிறது, சுந்தரத்தின் சோலைக் காடு. மலைச்சாரல் மழை போல தூறிக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் அந்தச் சோலைக்குள் நுழைந்தோம். குடை பிடித்துக்கொண்டே மரங்களைச் சுற்றிக் காட்டினார், சுந்தரம்.
''சொந்த ஊர் பாண்டிசேரி பக்கத்துல இருக்குற தவளக்குப்பம். அப்பா பாண்டிச்சேரி முதல்வருக்கு பி.ஏ.வா இருந்தார். சின்னக் குழந்தையில இருந்தே விவசாயம் பிடிக்கும். காலேஜ் முடிச்சுட்டு சொந்த ஊர்ல இருந்த 30 ஏக்கர்ல விவசாயம் பார்த்துக்கிட்டே, தனியார் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். 92-ம் வருஷம் அப்பா 'ரிட்டையர்டு’ ஆன பிறகு, அவரும் விவசாயத்துக்கு வந்து, நெல், கடலை, தென்னை, மரவள்ளினு சாகுபடி செஞ்சார். எங்க ஊர்ல, வேலை ஆட்கள் பிரச்னையால சரியா விவசாயம் பார்க்க முடியலை. அதனால, 18 ஏக்கர் நிலத்தை வித்துட்டோம். அதுக்கப்பறம், நான் வேலையை உதறிட்டு, வேலையாள் பிரச்னை இல்லாத இடமா தேடி அலைய ஆரம்பிச்சு... இந்த ஊர்ல
33 ஏக்கர் நிலம் வாங்கி, கடலை, காராமணி, மரவள்ளினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
இங்கயும் கொஞ்ச நாள்லயே, தண்ணி பிரச்னை வந்துடுச்சு. அந்த சமயத்துல, பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில முதல்வரா இருந்த, சம்பந்தமூர்த்திகிட்ட பேசுனப்போ... 'நெல்லி, சப்போட்டா, மா மாதிரியான பழ மரங்களை வெச்சா, வேலை ஆட்களோட தேவையும் குறையும். குறைஞ்ச தண்ணீரை வெச்சும் சமாளிச்சுடலாம்’னு சொன்னார். அதுக்குப் பிறகு, 12 ஏக்கர்ல நெல்லி, 6 ஏக்கர்ல சப்போட்டா, வேலி ஓரத்துல 1,500 தேக்குனு நடவு செஞ்சுட்டு, மீதி நிலத்துல வழக்கமான சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ஓரளவுக்கு வேலையாட்கள் தேவையும், தண்ணீர் தட்டுப்பாடும் கட்டுக்குள் வந்துச்சு. நாலு வருஷத்துல நெல்லியும், அஞ்சு வருஷத்துல சப்போட்டாவும் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, மீதம் இருந்த நிலத்துல எல்லாம், மா, எலுமிச்சை, தென்னைனு நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சுந்தரம் தொடர்ந்தார்.
வழிகாட்டிய பாலேக்கர்!
''பழ மரங்கள் வருமானம் கொடுக்கறதைப் பாத்ததும், 'இந்த மண்ணுல மர வகைகள் நல்லா வளரும்’னு எனக்குப்பட்டது. என்ன மரங்களை வைக்கலாம்னு தேடிகிட்டிருந்தப்போதான், 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள், என்னை ஈர்த்துச்சு. அவரோட பயிற்சியிலயும் கலந்துகிட்டேன். மர சாகுபடி செய்யுற பண்ணைகள் பலதுக்கும் போய், அந்த விவசாயிகளோட அனுபவங்கள உள் வாங்கிக்கிட்டேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சியில மர வகைகள், பலன் கொடுக்குற காலம், சந்தை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.
அதுக்கப்பறம்தான், பழ மரங்களுக்கு இடையில குமிழ், மலைவேம்பு மரங்களை நட்டேன். சில இடங்கள்ல அடியில பாறை இருந்ததால இந்த மரங்கள் சரியா வரல. அதனால, வேங்கை, மகோகனி, சிகப்பு சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்சு மாதிரியான மரங்களை நட்டிருக்கேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைச்சு, சுத்திக் கிடக்குற இலைதழைகளை மரத்துக்கிட்ட தள்ளி விட்டுடுவேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழு உருவாகிட்டதால... இப்ப உழவே ஓட்டுறதில்லை. எல்லாத்தையும் மண்புழுக்களே பாத்துக்குது. எல்லாமே பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் மகத்துவம்தான்!
57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்!
கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல கிடைச்ச நிலங்களை வாங்கினதுல இப்போ மொத்தம் 57 ஏக்கர் இருக்கு. 15 ஏக்கர்ல 900 மா, 12 ஏக்கர்ல 2 ஆயிரம் நெல்லி, 12 ஏக்கர்ல 1,300 சப்போட்டா, 6 ஏக்கர்ல 700 தென்னை, 2 ஏக்கர்ல 400 எலுமிச்சை; 200 சாத்துக்குடி, 4 ஏக்கர்ல 450 கொய்யா, 6 ஏக்கர்ல பல வகையான தடி மரங்கள்னு வெச்சுருக்கேன். பழமரங்களுக்கு இடையிலயும், தனியாகவும் 1,900 தேக்கு மரங்கள் இருக்கு. இதுல 1,500 மரங்கள் வேலிப்பயிர். இதுக்கு 9 வயசாகுது. ஊடுபயிரா 1,100 மகோகனி, 400 மலைவேம்பு, 3 ஆயிரம் வேங்கை, 700 குமிழ், 150 தீக்குச்சி, 150 பூவரசு, 60 காட்டுவாகை, 250 இலவம், 600 சிகப்பு சந்தனம், 300 ரோஸ்வுட், 150 சிலவாகை மரங்கள்னு கிட்டத்தட்ட 16 ஆயிரம் மரங்கள் இருக்குது. இதுபோக, 1,200 செடிமுருங்கை, 500 அகத்தியும் இருக்கு'' என்ற சுந்தரம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
செலவை ஈடுசெய்யும் பழ மரங்கள்!
''இப்போதைக்கு நெல்லி, சப்போட்டா, மா மட்டும்தான் காய்ப்பில் இருக்குது. நெல்லி மூலமா வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய்; மாங்காய் மூலமா வருஷத்துக்கு
2 லட்சம் ரூபாய்; சப்போட்டா மூலமா வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய்னு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்குது. இந்த வருமானம்... நிர்வாகச் செலவுக்கு சரியாயிடுது. இன்னும் மூணு, நாலு வருஷத்துல எல்லா பழ மரங்களும் காய்க்க ஆரம்பிச்சு... எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, இளநீர் மூலமாவும் வருமானம் வர ஆரம்பிக்கும். அப்போ, எல்லா செலவும் போக, பழங்கள் மூலமா ஒரு ஏக்கர்ல இருந்து மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். தடிமரங்களைப் பொறுத்தவரை, எல்லா ரகங்கள்லயும் சேர்த்து, மொத்தம் 7 ஆயிரத்து 260 மரங்கள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விலைக்குப் போகும். 10 வருஷம் கழிச்சு, கொஞ்ச மரங்களையும் 20 வருஷம் கழிச்சு கொஞ்ச மரங்களையும் விக்கிறப்போ கோடிக்கணக்குல வருமானம் வரும்னு எதிர்பாக்குறேன்'' என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், சுந்தரம்.
தொடர்புக்கு, சுந்தரம், 
செல்போன்: 84891-91774.

பழ மரங்களுக்கு இடையில் பயன்தரும் மரங்கள்!
மர வகைகளை சாகுபடி செய்வது பற்றி, சுந்தரம் சொல்லும் தொழில்நுட்பங்கள்-
''மரக்கன்றுகளை நடவு செய்யும் நிலத்தில் களை இல்லாத அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். மேட்டுப்பகுதி நிலத்தில் ஆடி மாதத்திலும், பள்ளமான பகுதிகளில், தை மாதத்திலும் நடவு செய்ய வேண்டும்.
18 அடிக்கு 18 அடி இடைவெளியில் நெல்லி; 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் மா;
22 அடிக்கு 22 அடி இடைவெளியில் சப்போட்டா; 14 அடிக்கு 14 அடி இடைவெளியில் கொய்யா; 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி; 22 அடிக்கு
22 அடி இடைவெளியில், தென்னை என ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி வித்தியாசப்படும்.
இரண்டரை அடி சதுரம், இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்து ஒரு மாதம் ஆறப்போட்டு... அதில், ஒரு கூடை எரு இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு பழ மர வரிசைகளுக்கு இடையில், தேக்கு, மகோகனி, சிகப்பு சந்தனம், மலைவேம்பு ஆகியவற்றை 8 அடி இடைவெளியிலும்; வேங்கை, பெருமரம், ரோஸ்வுட் ஆகியவற்றை 10 அடி இடைவெளியிலும்; காட்டுவாகை, பூவரசு, இலவு ஆகியவற்றை 15 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
இந்த மரங்களுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் வரை பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மரத்துக்குத் தேவையான தழைச்சத்துகள் கிடைப்பதோடு, வருமானமும் கிடைக்கும். பழ மரங்களுக்கு கவாத்து தேவையில்லை. தடி மரவகைகளை
10 ஆண்டுகள் வரை கவாத்து செய்ய வேண்டும். இதை மட்டும் செய்து வந்தாலே... உங்கள் நிலம் 'காடு’ போல மாறி, பறவைகள், விலங்குகள் எனத் தோட்டம் முழுக்க உயிர்ச் சூழல் பண்ணையாகி விடும்.''

அருகம்புல்

மூலிகை வனம்
ரா.கு. கனல் அரசு படம்: எல். ராஜேந்திரன்
தீர்வு
மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில், அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்துகொள்வோம்...
'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.
புல் வகைகளின் அரசன்!
அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!
'அருகன்' என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம்.
இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். 'அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை 'விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை 'பால வாகடம்' என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குருமருந்து' எனவும் அழைக்கிறார்கள்.
அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்!
காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது.
இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். 'பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!
தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.  
கிரீன் பிளட்..!
அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... ஆரோக்கியமாய் வாழ்வோம்.
- வலம் வருவோம்...

Thursday, 5 February 2015

சாமை


சாமை மாம்பழக் கேசரி

தேவையான பொருட்கள்:
சாமை அரிசி-ஒரு கப்
மாம்பழத் துண்டுகள்-அரை கப்
சர்க்கரை-அரை கப்
முந்திரி, திராட்சை-சிறிதளவு
நெய்-2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஒரு கப் சாமை அரிசியுடன் 3 கப் நீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். பாதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். மீதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, அலங்கரித்துப் பரிமாறவும்.
வரகு வெஜ் கிச்சடி:

தேவையான பொருட்கள்:
வரகரிசி-ஒரு கப்,
கேரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக்கிழங்கு - 1
பச்சைப் பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
சோம்பு - கால் டீஸ்பூன்
முந்திரி - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
புதினா, கொத்தமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன்  நெய்யை சூடாக்கி, முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பிறகு, அதனுடன் 2-3 டீஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடாக்கி, சோம்பு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்க்கவும். இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி, கீறிய பச்சைமிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். 3 கப் நீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இப்போது வரகரிசி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் மூடிவைத்து சமைக்கவும். வெந்ததும், மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறிதளவு புதினா, கொத்தமல்லி தூவி, அலங்கரிக்கவும். சூடான, சுவையான, சத்தான, வரகு வெஜ் கிச்சடி ரெடி!